அரசு பஸ் மோதியதில் வாலிபர் பலியானார். இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் சென்னை ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவண்ணாமலையிலிருந்து சென்னை சென்று கொண்டிருந்த அரசு பஸ் ஒன்று இன்று இரவு 8-30 மணி அளவில் சோமாசிபாடி கிராமத்தில் சென்ற போது முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக சொல்லப்படுகிறது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் தலை நசுங்கி அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் இறந்தார்.
இறந்தவர் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி வட்ராப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வேன் டிரைவரான திருமலையின் மகன் முத்துராஜ் (வயது 28) என்பது தெரிய வந்தது. இவருக்கு கடந்த வருடம்தான் திருமணம் ஆனது. மனைவி கர்ப்பமாக உள்ளார். ஹோட்டலில் டிபன் வாங்கிக்கொண்டு வீடு திரும்பும் போது இந்த விபத்து நடந்துள்ளது.
இத்தகவல் பரவியதும் வட்ராப்புத்தூர் கிராம மக்கள் திருவண்ணாமலை- சென்னை ரோட்டில் சோமாசிபாடியில் 9 மணி முதல் 10 மணி வரை இறந்த முத்துராஜியின் உடலை எடுக்கவிடாமல் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இருபுறங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
போலீசார் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். வாகனங்களின் வேகத்தை குறைக்க சாலையில் நடுவே பேரிகார்டுகளை அமைக்காதது ஏன்? என கேட்டு போலீசாரிடம் கிராம மக்கள் வாக்குவாத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிறகு அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.