தினம் ரூ.1000-த்துடன் அரசு குழந்தைகள் இல்லத்தில் வேலை

அரசு குழந்தைகள் இல்லத்தில் உளவியல் படித்தவர்களுக்கு தினம் 1000 ரூபாய் ஊதியத்துடன் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

மாணவ-மாணவிகளுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களது மன அழுத்தத்தை போக்கிட உளவியல் வல்லுநர்களின் தேவை முக்கியமானதாக உள்ளது. உளவியல் படித்தால் உலகெங்கிலும் வேலை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர் பணியிடத்திற்கு உளவியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 

தமிழ்நாடு அரசு, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இயங்கும் 36 அரசு இல்லங்களில் (வால்டாக்ஸ், தர்மபுரி, சேலம், பெத்தநாயக்கன்பாளையம், தூத்துக்குடி, தென்காசி தவிர்த்து) தங்கி பயிலும் குழந்தைகளுக்கு ஆற்றுநர்கள் மூலம் ஆற்றுபடுத்துதல் சேவை வழங்க ஆணை வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர் பணியிடங்கள் 3 (ஒருவர் பெண் பணியாளர்) மதிப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. 

இப்பதவிக்கு தகுதியான உளவியல் மற்றும் ஆற்றுபடுத்துதல் ஆகிய கல்வியில் முதுகலை பட்டம் பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் உரிய சான்றின் ஒளி நகலுடன் 15 நாட்களுக்குள் கீழ் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. 

தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் வல்லுநர்கள் கொண்ட தேர்வுக் குழு மூலம் நடைபெறும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு செய்யப்படும் ஆற்றுபடுத்துநர்களுக்கு வருகையின் மதிப்பூதிய அடிப்படையில் சேவை வழங்க ஒரு வருகைக்கு நாள் ஒன்றுக்கு போக்குவரத்து செலவு உட்பட ரூ.1000ஃ- (ரூபாய் ஆயிரம் மட்டும்) வழங்கப்படும். 

மேலும் விவரம் வேண்டுவோர் சம்மந்தப்பட்ட திருவண்ணாமலை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.  04175 - 223030 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், வட்டாட்சியர் அலுவலக வளாகம், திருவண்ணாமலை- 606 601.

இவ்வாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். 

---------------------------------------