திருவண்ணாமலை அடுத்த சாத்தனூர் அணையில் ஹாயாக வலம் வந்த ராட்சத முதலையால் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை அடுத்த சாத்தனூர் அணையில் தற்பொழுது பெய்து வரும் கனமழையால் சாத்தனூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அணையின் மொத்த கொள்ளவு 119 அடியாகும். தற்போது 117.40 அடி வரை தண்ணீர் உள்ளது. விநாடிக்கு 1000 கன அடிக்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சாத்தனூர் அணையில் உள்ள முதலைப்பண்ணையில் சுமார் 400 முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகிற நிலையில் தென்பெண்ணை ஆற்றில் ஏராளமான முதலைகள் உள்ளன. இந்த முதலைகளால் உயிரிழப்பும் ஏற்பட்டிருக்கிறது. 2020-ஆம் ஆண்டு ஆற்றில் முதலைகள் அதிகரித்து இருப்பதால் உள்ளே வர வேண்டாம் வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை எச்சரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று அதிகாலை தென்பெண்ணெய் ஆற்றிலிருந்து ராட்சத முதலை ஒன்று 11 கண் மதகு அருகே வெளியே வந்து பயணிகள் சுற்றி பார்க்க கூடிய நடைபாதையின் மீது ஹாயாக நடமாடியது. காலை நேரம் என்பதால் சுற்றுலா பயணிகள் யாரும் இல்லை. அங்கிருந்த ஒரு சில பணியாளர்கள் மெகா சைஸ் முதலையை பார்த்து அச்சம் அடைந்து ஓடினர்.
இதையடுத்து வனச்சரக அலுவலத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முதலைப்பண்ணையிலிருந்து வந்த பணியாளர் ஒருவர் ராட்சத முதலையை லாவகமாக கோலால் தள்ளி மீண்டும் ஆற்றிற்கே விரட்டினர்.
ஆற்றில் இருந்து முதலை வெளியே வந்த பகுதி கண்காணிக்கப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
சாத்தனூர் அணையில் மீண்டும் முதலை நடமாடிய சம்பவம் சுற்றுலா பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Social Plugin