விவசாயி தீக்குளிப்புக்கு காரணமான விஏஓ சஸ்பெண்ட்
உதவியாளர்கள் 3 பேரும் வேலை நீக்கம்
சிட்டா அடங்கல் தர மறுத்ததால் வேதனை அடைந்த விவசாயி விஏஓ அலுவலகம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதையொட்டி விஏஓ உள்பட 3 பேரை கலெக்டர் சஸ்பெண்ட் செய்துள்ளார்.
திருவண்ணாமலை அடுத்த கலசப்பாக்கம் அருகே உள்ள மஷார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமகிருஷ்ணன் என்பவர் ஊதிரம்பூண்டியில் உள்ள தனது நிலத்திற்கு சிட்டா அடங்கல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். இதற்காக தேவனாம்பட்டு விஏஓ அலுவலகத்திற்கு நடையாய் நடந்தார். ஆனால் சிட்டா அடங்கல் கிடைக்கவில்லை.
இதனால் வேதனையில் இருந்து வந்த ராமகிருஷ்ணன், நேற்று தேவனாம்பட்டு விஏஓ அலுவலகம் முன்பு தன் உடம்பின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அங்கிருந்தவர்கள் தீயை அணைத்தனர். 'முடியல சாமி, நான் என்ன தப்பு செய்தேன். தெய்வமே' என பேசியபடி ராமகிருஷ்ணன் தீக்காயங்களுடன் அங்கும், இங்குமாக நடந்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.
![]() |
ராமகிருஷ்ணன் |
60 சதவீத தீக்காயங்களுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிட்டா அடங்கல் கிடைக்காத விரக்தியில் விவசாயி தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது சம்மந்தமாக திருவண்ணாமலை கோட்டாட்சியர் மந்தாகினி விசாரணை நடத்தி கலெக்டருக்கு அறிக்கை அளித்தார். அதன் அடிப்படையில் தேவனாம்பட்டு விஏஓ காந்தி, அவரது உதவியாளர்கள் தேவனாம்பட்டு குமார், ஊதிரம்பூண்டி மாரிமுத்து, காட்டுப்புத்தூர் சின்னசாமி ஆகிய 4 பேரை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.
Social Plugin