நபருக்கு ரூ.30, ரூ.50-ஆட்டோ கட்டணம் நிர்ணயம்
சித்ரா பவுர்ணமிக்கு கட்டணமில்லா பேருந்திலும் பயணம் செய்யலாம் - கலெக்டர் தகவல்
சித்ரா பவுர்ணமியை யொட்டி ஆட்டோவில் செல்ல தனி நபருக்கு ரூ.30, ரூ.50 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், கட்டணமில்லா பேருந்து வசதியும் செய்து தரப்பட்டிருப்பதாகவும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இது சம்மந்தமாக திருவண்ணாமலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
23.04.2024 செவ்வாய்கிழமை (நாளை) நடைபெற உள்ள சித்ரா பவுர்ணமி திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகருக்கு வருகை தரும் பக்தர்களின் நலன் கருதி ஆட்டோ ரிக்ஷா தனி நபர் கட்டணம் கீழ்கண்ட வகையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தனிநபர் கட்டணம் ரூ.50/-
1) அத்தியந்தல் தற்காலிக பேருந்து நிலையம் முதல் அரசு கலை கல்லூரி மைதானம் வரை (பெரும்பாக்கம்)
2) அத்தியந்தல் தற்காலிக பேருந்து நிலையம் முதல் அங்காளம்மன் கோயில் வரை (தண்டராம்பட்டு ரோடு)
3) திருக்கோவிலூர் ரோடு முதல் அத்தியந்தல் வரை (பெரும்பாக்கம்)
தனிநபர் ஒன்றுக்கு கட்டணம் ரூ.30/-
1) வேட்டவலம் தற்காலிக பேருந்து நிலையம் முதல் திருக்கோவிலூர் தற்காலிக பேருந்து நிலையம் வரை
2) திருக்கோவிலூர் தற்காலிக பேருந்து நிலையம் முதல் அங்காளம்மன் கோயில் வரை (தண்டராம்பட்டு ரோடு)
3) மணலூர் பேட்டை சாலை முதல் அங்காளம்மன் கோயில் வரை (தண்டராம்பட்டு ரோடு)
4) அரசு கலை கல்லூரி முதல் அங்காளம்மன் கோயில் வரை (தண்டராம்பட்டு ரோடு)
5) திண்டிவனம் ரோடு தற்காலிக பேருந்து நிலையம் முதல் திருவள்ளுவர் சிலை வரை (திருக்கோவிலூர் ரோடு)
6) திண்டிவனம் ரோடு தற்காலிக பேருந்து நிலையம் முதல் காந்தி நகர் பைபாஸ் ரோடு 6வது குறுக்கு தெரு வரை (அமோகா ஓட்டல்)
7) நல்லவன்பாளையம் முதல் அங்காளபரமேஸ்வரி கோவில் வரை (தண்டராம்பட்டு ரோடு)
8) பச்சையம்மன் கோவில் முதல் கிருஷ்ணா லாட்ஜ் வரை (சங்கு ஊதும் இடம்)
9) தீபம் நகர் பைபாஸ் ரோடு முதல் அண்ணா நுழைவு வாயில் வரை
10) SRGDS பள்ளி முதல் அவலூர்பேட்டை ரயில்வே கேட் வரை
கட்டணமில்லா பேருந்து வசதி
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் வரும் பக்தர்களின் நலன் கருதி கட்டணமில்லா பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து கிரிவல பாதைக்கு வருவதற்கு திருவண்ணாமலை மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் திருவண்ணாமலை நகர தனியார் பள்ளி நிர்வாகம் கட்டணமில்லா பேருந்துகளை இயக்க முன்வந்துள்ளனர். பக்தர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
திருவண்ணாமலை நகருக்கு வருகை தரும் பக்தர்களுக்கு இந்நகரை சுற்றி அமைக்கப்பெறும் தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து முக்கியமான இடங்களுக்கு செல்ல 20 கட்டணமில்லா தனியார் பேருந்து சேவை மற்றும் 81 கட்டணமில்லா தனியார் பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
அதிக கட்டண ஆட்டோ மீது நடவடிக்கை
•திருவண்ணாமலை நகரைச் சேர்ந்த 950 உள்ளுர் ஆட்டோகளுக்கு ஆவணங்கள் சரிபாக்கப்பட்டு, எந்தெந்த வழித்தடத்திற்கு எவ்வளவு தனி நபர் கட்டணம் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்படும்
•மேலும் விதிகளை மீறி அதிக கட்டணம் வசூல் செய்யும் ஆட்டோக்களை தணிக்கை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
•ஆட்டோக்கள் கட்டணம் பற்றி விவரங்கள் டிஜிட்டல் பேனர்கள் மூலம் தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் எளிதாக பொதுமக்கள் பார்வையில் தென்படும் வகையில் அமைக்கப்படும். ஆட்டோ கட்டணம் குறித்து ஆட்டோக்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும்.
•மேலும் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரிய வந்தால் திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கட்டுபாட்டு அறை தொலைபேசி எண்: 04175 232266 என்ற எண்ணிற்கு தெரியப்படுத்தும் வகையில் flex Board, டிஜிட்டல் பேனர்கள் மற்றும் ஸ்டிக்கரில் பொறிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
•வருவாய் துறை, போக்குவரத்து காவல் துறை மற்றும் போக்குவரத்து கழக ஊழியர்களுடன் இணைந்து பொதுமக்கள் இடையூறின்றி கிரிவலப் பாதையில் சென்று வர இவ்வலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிறப்புப்பணியில் அனைத்து தற்காலிக பேருந்து நிலையத்திற்கும் பணியமர்த்தப்படுவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கிரிவலப்பாதையில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு
--------------------------------------------------------
Social Plugin