வெப்ப அலை-இந்த நேரத்தில் வெளியில் வர வேண்டாம்

வெப்ப அலை-இந்த நேரத்தில் வெளியில் வர வேண்டாம் 

திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள் 

வெப்ப அலை வீசும் மாவட்டங்களில் திருவண்ணாமலையும் ஒன்று என்பதால் மாவட்ட மக்கள் பகல் நேரத்தில் வெளியில் வர வேண்டாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் எச்சரித்துள்ளார். 

வெப்ப அலை-பொது மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, 

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தனது 23.04.2024ம் நாளிட்ட அறிவிக்கையில் தமிழ்நாட்டின் வட உள்மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல்,  நீலகிரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் 23.04.2024 மற்றும் 24.04.2024 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடுமாறும், வெயிலின் தாக்கத்தால் உடல்நலக்குறைவு ஏற்படும் நிலையில், உடனடியாக மருத்துவரை அணுகுமாறும், பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

இவ்வாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Post Previous Post

No comments