குத்தகைக்கு விடப்பட்ட கோயில் நிலங்களை மீட்கலாம்

குத்தகைக்கு விடப்பட்ட கோயில் நிலங்களை மீட்கலாம் 

திருவண்ணாமலை போக்குவரத்து நெரிசலை சரி செய்ய கு.பிச்சாண்டி யோசனை 

திருவண்ணாமலையில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பொருட்டு வாகனம் நிறுத்துமிடத்திற்காக குத்தகைக்கு விடப்பட்ட கோயில் நிலங்களை மீட்கலாம் என துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தெரிவித்தார். 

குத்தகைக்கு விடப்பட்ட கோயில் நிலங்களை மீட்கலாம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் திருவண்ணாமலை நகர போக்குவரத்து சீரமைப்பு குழு ஆய்வு கூட்டம் குழுத் தலைவரும், சட்டமன்ற துணைத் தலைவருமான கு.பிச்சாண்டி தலைமையில் இன்று நடைபெற்றது

இதில் கலெக்டர் பா.முருகேஷ், குழு உறுப்பினர் மு.பெ.கிரி எம்.எல்.ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே.கம்பன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சட்டமன்ற துணைத் தலைவர் கு.பிச்சாண்டி பேசியதாவது, 

முதல் கட்டமாக மருத்துவக்கல்லூரி அருகில் உள்ள காலியிடத்தை வேலி அமைத்து அதில் வாகனங்களை நிறுத்தலாம். கிராம ஊராட்சிகளில் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கோயில் நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. அந்த இடங்களை எல்லாம் அதிகாரிகள் மீட்டு வாகன நிறுத்தங்களாக பயன்படுத்தி கொள்ள பரிந்துரை செய்யலாம். காந்தி நகர் பைபாஸில் உள்ள ஒரு சில இடங்களை தவிர்த்து, மற்ற குத்தகை இடங்களை மீட்டு வாகனம் நிறுத்துமிடமாகவும் பயன்படுத்தலாம். 

மேலும், கோயில் அதிகாரிகள், கோயிலுக்கு சொந்தமான இடத்தை நிரந்தரமாக வாங்கி, நிறுத்துமிடங்கள் அமைக்க அமைச்சரிடம் பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், பஸ் உரிமையாளர்கள், லாட்ஜ் உரிமையாளர்கள் இணைந்து தனிப்பட்ட முறையில் இடங்களை வாங்கி, லாட்ஜ்க்கு வருகிற வாகனங்களை நிறுத்துமிடங்களாக பயன்படுத்தி கொள்வதன் மூலம் போக்குவரத்தை முறைப்படுத்தலாம்.

பேகோபுரத்திலிருந்து பேருந்து நிலையம் செல்கிற சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அகலப்படுத்துவதனால் போக்குவரத்து நெரிசல் குறையும். மணலூர்பேட்டை சாலையிலிருந்து திருக்கோயிலூர் செல்கிற வழியில் உட்புற சாலைகள் உள்ளன. அந்த உட்புற சாலைகளை எல்லாம் சரி பார்த்து, அதன் வழியாக வண்டிகளை திருப்பி விடுவதன் மூலம் போக்குவரத்தை சீரமைக்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் கோட்டாட்சியர், அனைத்து வியபாரிகள் சங்க பிரதிநிதிகள், ஒட்டல் உரிமையாளர்கள், ஆட்டோ ஒட்டுநர் சங்க நிர்வாகிகள், தனியார் பஸ் சங்க பிரதிநிதிகள், நகரமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை சட்டமன்ற துணைத் தலைவர் கு.பிச்சாண்டியிடம் தெரிவித்தனர். 

அடுத்த குழு கூட்டம் 23.01.2024 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

----------------------------


Link:http://www.youtube.com/@AgniMurasu

Next Post Previous Post

No comments