கண்ணாடி இழை கேபிளை தடை செய்தால்...கலெக்டர் எச்சரிக்கை

கண்ணாடி இழை கேபிளை தடை செய்தால்...கலெக்டர் எச்சரிக்கை

ஊராட்சிகளில் இணைய வசதியை ஏற்படுத்தும் கண்ணாடி இழை கேபிளை தடை செய்தாலோ, சேதம் ஏற்படுத்தினாலோ, திருடினாலோ கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் முருகேஷ் எச்சரித்துள்ளார். 

கண்ணாடி இழை கேபிளுக்கு தடை-கலெக்டர் எச்சரிக்கை

இது குறித்து கலெக்டர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, 

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 860 கிராம ஊராட்சிகளிலும், இணையதள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டமானது, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET)  மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கண்ணாடி இழை (Optical Fiber Cable)  85 சதவீதம் மின்கம்பங்கள் மூலமாகவும், 15 சதவீதம் தரைவழியாகவும் இணைக்கப்படுகிறது. இதுவரை நமது மாவட்டத்தில் உள்ள மொத்த ஊராட்சிகளில் 657 ஊராட்சிகளில் இணைய வசதி வழங்கிட தயார்நிலையில் உள்ளது.

இத்திட்டத்திற்கான Rack/UPS உள்ளிட்ட உபகரணங்கள், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம ஊராட்சி சேவை மையம் (VPSC)  அல்லது அரசு கட்டிடத்தில் நிறுவப்பட்டு வருகிறது. இந்த உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ள அறையானது, சம்பந்தப்பட்ட ஊராட்சிமன்றத் தலைவரால் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்திற்கான உபகரணங்களை பாதுகாத்திடவும்,  தடையில்லா மின்வசதி உள்ளதை உறுதி செய்திடவும், POP பொருத்தப்பட்டுள்ள அறையில் வேறு தேவையற்ற பொருட்கள் வைக்கப்படாமல் இருப்பதை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு, சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி செயலாளர் அரசாணையின்படி பொறுப்பாக்கப்பட்டு உள்ளார்.

கண்ணாடி இழை கேபிளுக்கு தடை-கலெக்டர் எச்சரிக்கை

கண்ணாடி இழை (Optical Fiber Cable) 85 சதவீதம் ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள மின்கம்பங்கள் வழியாக கொண்டு செல்வதற்கு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் சிலர் தங்களுக்கு சொந்தமான நிலங்களில் கண்ணாடி இழை கொண்டு செல்லக்கூடாது என தடைசெய்கின்றனர். இத்திட்டம் முழுமையான அரசின் திட்டம். கண்ணாடி இழை மின்சாரத்தை கடத்தாது. எனவே இக்கண்ணாடி இழை ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள மின்கம்பங்கள் வழியாக கொண்டு செல்ல பொதுமக்கள் தடை செய்யக்கூடாது.

மேலும் விளைநிலங்களில் உள்ள மின்கம்பங்களின் வழியாக கண்ணாடி இழைகள் இணைக்கப்படும் போது பயிர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது. கண்ணாடி இழையில் எந்த விதமான உலோக பொருட்களும் இல்லை. எனவே இதனை திருடி சென்று காசாக்கலாம் என தவறான புரிதல் வேண்டாம்.

இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் போது, ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் வசிக்கும் மக்கள் அனைவரும் அதிவேக இணையதள வசதிகளை பெறமுடியும். ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் POP மையங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்கலம், UPS, Router, Rack மற்றும் கண்ணாடி இழை வலையமைப்பு உள்ளிட்ட உபகரணங்கள் யாவும் அரசின் உடைமைகளாகும்.

மேற்கண்ட உபகரணங்கள் சேதப்படுத்தும் அல்லது திருடும், கண்ணாடி இழைகளை துண்டாக்கும் மற்றும் மின்கம்பங்கள் வழியாக கொண்டு செல்ல தடைசெய்யும் நபர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

                                                      𑁋𑁋𑁋𑁋𑁋𑁋𑁋𑁋𑁋𑁋


Next Post Previous Post

No comments