திமுக நிர்வாகி மீது கொலை வெறித் தாக்குதல்-5 பேர் கைது

திமுக நிர்வாகி மீது கொலை வெறித் தாக்குதல்-5 பேர் கைது

திருவண்ணாமலை திமுக நிர்வாகி மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இது குறித்த விவரம் வருமாறு, 

திருவண்ணாமலை சின்னகடைத் தெருவில் உள்ள வடவீதி தெருவில் வசிப்பவர் உதயமுத்து(38). திமுக முன்னாள் நகர இளைஞரணி துணை அமைப்பாளர். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். 

நேற்று முன்தினம் 30ந் தேதி உதயமுத்து, மோட்டார் சைக்கிளில் தன்னுடன் ராஜேஷ் என்பவரை உட்கார வைத்துக் கொண்டு வேலூர் செல்லும் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். இரவு 7 மணி அளவில் வேங்கிக்கால் பால் குளிரூட்டும் நிலையம் (ஆவின்) அருகே சென்ற போது காரிலும், பைக்கிலும் வந்தவர்கள் அவர்களை மறித்தனர். 

இதைப்பார்த்ததும் ராஜேஷ் பைக்கிலிருந்து குதித்து ஆவின் நிறுவனத்துக்குள் ஓடி தப்பினார். உதயமுத்து மீது அந்த கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தி விட்டு தப்பி ஓடிவிட்டது. ரத்த வெள்ளத்தில் சாய்ந்த உதயமுத்து முதலில் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், பிறகு மேல் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

திமுக நிர்வாகி மீது கொலை வெறித் தாக்குதல்-5 பேர் கைது
உதயமுத்து

திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு, 

திருவண்ணாமலை வடக்கு தெருவை சேர்ந்த சியாம் சுந்தர், வேங்கிக்கால் எழில்நகரைச் சேர்ந்த பாலாஜி(24), ஜன்னத் நகரைச் சேர்ந்த அஷ்ரப்(21), செல்வபுரம் கிராமத்தைச் சேர்ந்த அருண்(21), ஜெய்பீம் நகரை சேர்ந்த பிரவீன்(21) 

இவர்களுக்கும், உதயமுத்து தரப்புக்கும் இடையே பேனர் கட்டுவதிலும், இடம் வாங்குவது குறித்தும் முன் விரோதம் இருந்து வந்ததாகவும், இதன் காரணமாகவே கொலை செய்ய திட்டம் தீட்டியதும், உதயமுத்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்ததும் உயிர் போய் விட்டது என கருதி அவர்கள் சென்று விட்டதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

கைது செய்யப்பட்ட 5 பேரும் இன்று கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். கோர்ட்டு உத்தரவின்படி அவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். 

Next Post Previous Post

No comments