சிங்கப்பூர் துறைமுகத்தை எ.வ.வேலு பார்வையிட்டார்

சிங்கப்பூர் துறைமுகத்தை எ.வ.வேலு பார்வையிட்டார்

சிங்கப்பூர் துறைமுக ஆணையத்தின் அழைப்பிற்கிணங்க, அமைச்சர் எ.வ.வேலு, சிங்கப்பூர் துறைமுகத்தில் சரக்குப் பெட்டக முனையத்தைப் பார்வையிட்டார்.

தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, சிங்கப்பூர் துறைமுக ஆணையத்தின் அழைப்பிற்கிணங்க, நேற்று (27.9.2023) சென்னையில் இருந்து நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், சிங்கப்பூரிலுள்ள இந்திய தூதரக ஆணையத்தின் முதன்மைச் செயலாளர் டி.பிரபாகர் மற்றும் பிற அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் சிங்கப்பூர் சென்று சிங்கப்பூர் துறைமுக சரக்குப் பெட்டக முனையத்தை பார்வையிட்டார். 

அப்போது அமைச்சர் எ.வ.வேலுவிடம் சிங்கப்பூர் துறைமுகத்தின் சிறப்புகளைப் பற்றி, அந்த துறைமுகத்தின் பிரதிநிதி எடுத்து கூறினார். 

பன்னாட்டு துறைமுக சரக்குப் பெட்டக முனையங்களில், சிங்கப்பூர் சரக்குப் பெட்டக முனையம் முதன்மையான ஒன்றாகும். இது சிங்கப்பூர் சரக்குப் பெட்டக பரிமாற்ற மையமாக செயல்பட்டு வருகிறது. இந்த சரக்குப் பெட்டக முனையம், துறைமுக சேவைகள் மற்றும் சரக்கு தீர்வுகளை வழங்குகிறது. 

2023 ஆம் ஆண்டில், சரக்குகளை கையாள்வதில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டபோதிலும், இந்த துறைமுகம் மட்டும், 37 மில்லியன் சரக்குப் பெட்டகங்களை (37million TEU) வெற்றிகரமாக கையாண்டுள்ளது. பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பு (Battery Energy Storage System-BESS), கணினி சார்ந்த ஒருங்கிணைந்த துறைமுக முனைய இயங்குதல் வசதி (Computer Integrated Terminal Operations Systems-CITOS) மற்றும் துறைமுக வலைதளம்(Portnet) போன்ற நவீன தொழிற்நுட்பங்கள் இந்த சாதனைக்கு காரணமாகும். 

சிங்கப்பூர் துறைமுகம் 55 கப்பல்கள் நிறுத்தும் தளம் மற்றும் சுமார் 50 மில்லியன் (50million TEU) சரக்குப் பெட்டகங்களை கையாளும் திறன் கொண்டது என்று அவர்கள் விளக்கி கூறினர். 

சிங்கப்பூர் துறைமுகத்தை எ.வ.வேலு பார்வையிட்டார்

சிங்கப்பூர் துறைமுக அலுவலர்களிடம், அமைச்சர் எ.வ.வேலு, தமிழ்நாட்டில் 1,076 கிலோ மீட்டர் நீளமுடைய கடற்கரை உள்ளது என்பதை தெரிவித்து, கடலூர் மற்றும் நாகப்பட்டிணம் ஆகிய இடங்களில் சிறு துறைமுகங்கள் அமைந்துள்ளன. இந்த துறைமுகங்களையோ அல்லது இதர சிறுதுறைமுகங்களில், ஏதேனும் பொருத்தமான சிறு துறைமுகங்களை மேம்படுத்துவது தொடர்பாக, விரிவாக விவாதித்தார்.

மேலும், தமிழ்நாட்டின் கடற்கரையின் திறனைப் பயன்படுத்துவதை, நோக்கமாக கொண்ட பிற வரவிருக்கும் திட்டங்களைப் பற்றியும் எடுத்துரைத்தார். தமிழ்நாட்டில் சிறு துறைமுகங்களை மேம்படுத்த அன்னிய முதலீட்டை அதிகரிப்பதற்கான சாத்தியமான வழிகள் குறித்தும், சிங்கப்பூர் துறைமுக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

துறைமுகங்கள் மற்றும் கடல்சார் திட்டங்களுக்கு, முதலீடுகளை எளிதாக்குவதற்கு, அனைத்து உதவிகளையும் வழங்குவதாக, எ.வ.வேலுவிடம்,  அவர்கள் உறுதியளித்தார்கள். மேலும் தமிழ்நாட்டிலுள்ள சிறு துறைமுகங்களை மேம்படுத்த, எ.வ.வேலு மேற்கொண்ட முயற்சிகளுக்கு, சிங்கப்பூர் துறைமுக பிரதிநிதிகள் உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.