பேக்கரி கடை உரிமையாளர் உள்பட 2 பேர் பலி

பேக்கரி கடை உரிமையாளர் உள்பட 2 பேர் பலி

செங்கம் அந்தனூர் அருகே நடந்த விபத்தில் பேக்கரி கடை உரிமையாளர் உள்பட 2 பேர் பலியானார்கள். 

திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார்(35). பேக்கரி கடை நடத்தி வந்தார். இவரது கடையில் பணிபுரிபவர் பீமன் (50). சம்பவத்தன்று இருவரும் காரில் பாண்டிச்சேரிக்கு சென்றனர்.

அங்கு வியாபார விஷயத்தை முடித்துக் கொண்டு பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஆனந்த்(20), அஜீத்(18) ஆகியோரை அழைத்துக் கொண்டு ஊர் திரும்பி கொண்டிருந்தனர். 

இன்று அதிகாலை செங்கத்தை அடுத்த அந்தனூர் அருகே கார் சென்ற போது காரும், எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதில் கார் நொறுங்கியது. விஜயகுமார், பீமன் ஆகிய இருவரும் காரிலேயே பிணமானார்கள். 

தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து காரில் இடிபாடுகளில் சிக்கியிருந்த ஆனந்த், அஜீத் ஆகிய இருவரையும் மீட்டனர். சிகிச்சைக்காக இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்து குறித்து செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகின்றனர். 

பாண்டி-பெங்களூர் சாலையில் அடிக்கடி நடைபெற்று வரும் விபத்தால் அப்பாவி உயிர்கள் பலியாவது தொடர்கதையாக உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற விபத்திலும் 3 பேர் உயிரிழுந்தனர். இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். விபத்துக்களை தவிர்க்க வேகத்தடை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

                                         ---------------------------------------------------

Next Post Previous Post

No comments