55 நாட்டு வெடிகுண்டுகளுடன் வாலிபர் கைது

வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டை கடித்த நாய் ஒன்று தலை சிதறி இறந்தது. இதையடுத்து வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 55 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

சாத்தனூர் வனச்சரகம் ராதாபுரம் அருகே உள்ள பூமலை காப்பு காட்டில் சாத்தனூர் வனச்சரக அலுவலர் ஸ்ரீனிவாசன் தலைமையில். வனவர் சியாமளா, வனக்காப்பாளர்கள் அருள்மொழி மற்றும் திலகவதி ஆகியோர் அடங்கிய குழு வனவிலங்கு வேட்டையை தடுப்பதற்காக இரவு ரோந்து பணியில் ஈடுபட்டது.

அப்பொழுது திருவண்ணாமலை கொண்டம் நரிக்குறவர் காலனியை சேர்ந்த சூர்யா என்பவரும், திருவண்ணாமலை தாலுகா குன்னியந்தல் கிராமத்தை சேர்ந்த கன்னியப்பன் மகன் ஜெய்சங்கர் (வயது 23) ஆகியோரும் சேர்ந்து நாட்டு வெடிகுண்டு தயார் செய்து அதில் கோழி இறைச்சி தடவி பூமலை காப்பு காட்டில் வனவிலங்கு வேட்டையாடுவதற்காக காத்திருந்தனர்.

ஆனால் காட்டுப்பன்றி சிக்குவதற்கு முன்பாகவே எதிர்பாராத நிலையில் நாய் ஒன்று அந்த வெடிகுண்டை கடித்து உயிர் இழந்தது. 

இந்த சத்தத்தை வனக்காப்பாளர்கள் அந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்களை பார்த்ததும் ஜெய்சங்கரும், சூர்யாவும் தப்பி ஓடினர்.

வனத்துறையினர் துரத்திச் சென்றதில் ஜெய்சங்கர் என்பவர் மட்டும் சிக்கினார். சூர்யா தப்பிச் சென்று விட்டார். 

கைது செய்யப்பட்ட ஜெய்சங்கர் என்பவரிடமிருந்து 55 நாட்டு வெடி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. 
Next Post Previous Post

No comments