கருந்துவம்பாடியில் மீன் பிடி வலையில் சிக்கி 2 பேர் பலி

கருந்துவம்பாடியில் மீன் பிடி வலையில் சிக்கி 2 பேர் பலி

திருவண்ணாமலை அருகே உள்ள கருந்துவம்பாடி ஏரியில் மீன் பிடி வலையில் சிக்கி 2 பேர் இறந்தனர். 

திருவண்ணாமலை அடுத்த துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் கருந்துவாம்பாடி ஏரியில் சிலர் அனுமதியின்றி மீன் பிடித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை அந்த ஏரியில் மீன்களை பிடிக்க வலை போடப்பட்டிருந்தது. 

அந்த பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளில் ஒன்று அந்த வலையில் சிக்கிக் கொண்டதாக சொல்லப்படுகிறது. மேய்ச்சலுக்கு ஆட்டை ஓட்டிச் சென்ற திருவேங்கடம் (வயது 32) இதைப்பார்த்து ஏரிக்குள் இறங்கி ஆட்டை காப்பாற்ற முயன்ற போது அவரது காலும் வலையில் சிக்கியது. அவர் ஏரியில் தத்தளித்ததை பார்த்து ரமேஷ்(40)  என்பவர் திருவேங்கடத்தை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரும் மீன் பிடி வலையில் சிக்கினார். 

இதில் 2 பேரும் நீரில் முழ்கி பரிதாபமாக இறந்தனர். ஆடும் இறந்தது. 


கருந்துவம்பாடியில் மீன் பிடி வலையில் சிக்கி 2 பேர் பலி
ரமேஷ்

திருவேங்கடம்


தகவல் கிடைத்ததும் ஊர் பொதுமக்கள் ஏரியில் மூழ்கிய 2 பேரின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு திருவேங்கடத்தின் உடல் மீட்கப்பட்டது. இன்று காலை ரமேஷின் உடல் மீட்கப்பட்டது. 

இறந்த ரமேஷ் செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார். அவருக்கு திருமணமாகி 12 வயதில் ஒரு மகளும், 8 வயதில் இன்னொரு மகளும் உள்ளனர். திருவேங்கடத்திற்கும் திருமணமாகி விட்டது. அவருக்கு 3 வயதில் மகளும், 1வயதில் மகனும் உள்ளனர். 

இது குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆட்டை காப்பாற்ற முயன்று 2 பேர் பலியான சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Post Previous Post

No comments