திருவண்ணாமலை ஆவினில் விஜிலென்ஸ்சில் சிக்கிய அதிகாரி

திருவண்ணாமலை ஆவினில் விஜிலென்ஸ்சில் சிக்கிய அதிகாரி

திருவண்ணாமலை ஆவின் நிறுவனத்தில் 48 மணி நேரம் விஜிலென்ஸ் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

திருவண்ணாமலை வேங்கிக்காலில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் என்ற ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் கீழ் 2 பால் குளிரூட்டும் நிலையங்களும்¸ 572 பால் சொசைட்டிகளும் இயங்கி வருகிறது. இதன் மூலம் தினமும் 2 லட்சத்து 83 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
இங்கு பொது மேலாளராக இருப்பவர் ராஜாகுமார். 

இவர் தான் பயன்படுத்தும் சங்கத்தின் காரில் விதிமுறையை மீறி ஜி(கவர்மெண்ட) என எழுதி பயன்படுத்தி வந்தராம். மேலும் இந்த வாகனத்திற்கு டீசல் போட்டதாக பல லட்சங்களை முறைகேடு செய்ததாக புகார்கள் கூறப்பட்டது. இது மட்டுமன்றி தனக்கு வேண்டப்பட்ட¸ கையெழுத்து போட அதிகாரம் இல்லாத கடைநிலை ஊழியரை கணக்கு¸ வழக்கு பார்க்க நியமித்திருப்பதாகவும்¸ பணத்தை எதிர்பார்த்து 5 தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையங்களுக்கு அனுமதி வழங்காமலும்¸ பால் உற்பத்தியாளர்களுக்கு தர வேண்டிய பணத்தை தராமல் இருந்து இழுத்தடித்து வந்ததாகவும் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

இது சம்மந்தமாக சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை பால்வள துணைப்பதிவாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் ஆவினில் செயல்பட்டு வரும் விஜிலென்ஸ் பிரிவின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயலட்சுமி¸ துணை காவல் கண்காணிப்பாளர் சத்தியசீலன் மற்றும் போலீசார் திருவண்ணாமலை ஆவின் நிறுவனத்தில் நேற்று முன்தினம் காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை நேற்று மாலை வரை நீடித்தது. ஏறக்குறைய 48 மணி நேரம் கணக்குகளை அலசி ஆராய்ந்ததோடு பொது மேலாளரை துருவி துருவி விசாரித்தனர்.

திருவண்ணாமலை ஆவினில் விஜிலென்ஸ்சில் சிக்கிய அதிகாரி

இந்த சோதனையின் போது சம்மந்தமே இல்லாமல் சங்கத்தின் கார்¸ உளுந்தூர்பேட்டை¸ சமயபுரம் அடிக்கடி சென்று வந்ததற்கான ஆவணங்களையும் சம்மந்தப்பட்ட இடங்களில் உள்ள சுங்கச்சாவடியில் திரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. நேற்று மாலை சோதனைகள் நிறைவடைந்ததும் ஒரு பை நிறைய ஆவணங்களோடு விஜிலென்ஸ் போலீசார் புறப்பட்டு சென்றனர். சோதனை அறிக்கை ஆவின் நிர்வாக இயக்குநரிடம் ஒப்படைக்கப்படும் என்றும்¸ அதன் பிறகே நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசாரும் ஆவினில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக அவர்கள் திருவண்ணாமலை ஆவின் பொது மேலாளர் ராஜாகுமாரிடமும் கடந்த மார்ச் மாதம் விசாரணை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
Next Post Previous Post

No comments